இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்கிய போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 300க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தொடர்ந்தும் இலங்கையில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகின்றன.
அதன்படி 29ம் தேதி அன்று, கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதி தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்முனை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்குகிறார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுக்கிறார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
You must be logged in to post a comment.