பேரண்டத்தில், பெருவெடிப்பு நிகழ்ந்த பின் ஏற்பட்ட அதிசயமே பூமியின் உருவாக்கம். நான்கில் மூன்று பங்கு கடல் பரப்பு, அதன் சுழற்சியால் உருவான காற்று வெளி மண்டலம், அதன் தொடர்ச்சியாக மழை, அருவிகள், ஆறுகள், மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் மீன்கள் என பேரதிசயத்தின் பேரதிசயமாய் உள்ளது இந்தப் பூமிப் பந்து.
தற்போதுள்ள அளவீட்டின்படி ஆறறிவு கொண்ட மனிதனின் உருவாக்கம் பூமியை ஒருபுறம் பண்படுத்தினாலும், மறுபுறம் பாழ்படுத்தியது. மனித இனத்தின் பேராசை, அதிகாரப் போக்கு போன்ற காரணிகள் பூமியை மேலும் சீர் குலைத்தன. அவ்வப்போது நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் இப்பூவுலகின் இயற்கைச் சமநிலையை புரட்டிப் போட்டு விடுகிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை மேலும் சூடாக்கின. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்துத் தரப்பும் மாசுபட்டன.
புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நடவேண்டும் என்ற கோரிக்கைகள் காற்றோடு கலந்து விடுகின்றன.. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
இதன் காரணமாகத்தான் புவி வெப்பமயமாதல், வெப்பநிலை அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், மழை குறைவு, வெள்ளப்பெருக்கு போன்றவை உண்டாகின்றன. இதனை தடுக்க முடியாவிட்டாலும், குறைக்க முடியும். மரங்களை நடுவது ஒன்றே இப்போது நம்முன் இருக்கும் தலையாய கடமை.
வனஅழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவை குறைக்கப்படவேண்டும், கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவை தொடர்ந்து நடந்து வந்தாலே பூமியை ஓரளவிற்கு நாம் காப்பாற்ற முடியும். நாம் சுகமாக வாழ இந்தப் பூமியைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பூமியைப் பாதுகாத்து வருங்கால சந்ததிகளிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
You must be logged in to post a comment.