பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி இன்று ராமேஸ்வரம் சென்றார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து அப்துல் கலாம் வீட்டிற்குச் சென்ற அவர் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்தார்.
இதனையடுத்து ராமேஸ்வரம் சிவகாமி நகரில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக அரசின் சாதனை துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக கொடுத்து வாக்கு சேகரித்தார்.
அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழகத்தில் வியாபாரிகள், ஏழை மக்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளுக்கு சென்றேன். தமிழகத்தில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இக்கூட்டணி 2014 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக இடங்கள் பிடித்து வெற்றி பெறும். மோடி தலைமையில் பாஜக ., ஆட்சி மீண்டும் அமையும். குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பிரதமராக 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஓய்வின்றி மக்களுக்காக உழைத்த வருகிறார். இந்த 19 ஆண்டு காலத்தில் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இல்லை. மோடி மீது ராகுல் பொய்யான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். பாரதம் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். நாட்டின் நன்மைக்காக இங்கு சிறப்பு பூஜை செய்ய வந்தேன் என்றார்.
பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ராமநாதன், பாஜக பிரதிநிதி ராமு, அதிமுக நகர் செயலர் அர்ஜுனன், நகர் இளைஞரணி செயலர் மகேந்திரன், நகர் ஜெ., பேரவை செயலர் கஜேந்திரன், நல்லு மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி புல்லந்தையில் உள்ள அம்பேத் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.