தேனி நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று (13/04/209) தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் மோடி. இதற்காக, தேனி அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அச்சமயம் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை காரணமாகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ளது சண்முகசுந்தராபுரம். தண்ணீர் பிரச்னை தொடர்பாக, பல்வேறு சிரமங்களை சந்தித்துவரும் இக்கிராம மக்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, வைகை அணை -ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சண்முகாசுந்தராபுரம் கிராமம் சேர்க்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபோதும், சண்முகாசுந்தராபுரம் கிராமத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் கிராம மக்கள்.
எனவே, தங்களது கிராமம் அருகே பிரதமர் மோடி வருவதை அறிந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் பிரசார மேடை அருகே போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், மதுரை − தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.