தூத்துக்குடி சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா இன்று (09/04/2019) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 18-ம் தேதி நடக்கிறது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு காலையில் கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரம், சுவாமி அம்பாளுக்கு அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இன்று துவங்கிய இத்திருவிழா, வரும் 18-ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
தினமும் சுவாமியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் மாலையில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் திருநாளான 11-ம் தேதி காலை 8.45 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும்விழா நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவான 15ம் தேதி காலை நடராஜப் பெருமானுக்கு உருகு சட்டசேவை நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவான வரும் 18-ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி சங்கரராமேஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாள் பெரியதேரிலும், சிறிய தேரில் விநாயகரும், முருகனும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
You must be logged in to post a comment.