இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அதிமுக கூட்டணி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை ஆகிய இடங்களில் இன்று மதியம் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்கள், மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களை வாக்காளர்கள் எடை போட்டு பார்க்கும் தேர்தல் இது. பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜ., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டு அங்கம் வகித்த திமுக., தமிழக வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களை நிறைவேற்றவில்லை. ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கொள்ளையடித்தது தான் சாதனை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் வீணடித்ததும் மிச்சம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்க முழு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசாக அதிமுக இன்றும் இருந்து வருகிறது. ஹஜ், ஜெருசலம் பயணத்திற்கு மானியத் தொகை தமிழக அரசு வழங்கி சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிமுக அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. அவரது மறைவிற்கு பிறகும் அவர் வகுத்த மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறோம். தற்போதைய தமிழக அரசு அறிவித்து செயல் படுத்தி வரும் புதிய திட்டங்களால் ஸ்டாலின் விரக்தி அடைந்து செய்வதறியாமல் பொய் பிரசாரம் செய்து வருகிறார். 1972ல் தொண்டர்கள் இயக்கமாக எம்ஜி ஆர் தோற்றுவித்த அதிமுகவை அவரது மறைவிற்கு பிறகு பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கருணாநிதி அழிக்க நினைத்தார். சதிகளை முறியடித்து ஜெயலலிதா கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. விவசாயி போல் தலைப்பாகை, கடைகளில் சென்று டீ குடிப்பது போல் தேர்தல் வெற்றிக்காக வேஷம் போடும் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக., காணாமல் போய்விடும் என ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்து வருகிறார்.
அதிமுகவை ., ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் பத்தாண்டு காலம் ஜெயலலிதாவினால் விலக்கி வைக்கப்பட்டவர். ஜெயலலிதா உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்தபோது டிடிவி தினகரன் எங்கிருந்தார். கட்சி, ஆட்சியை அபகரிக்க நினைத்த டிடிவி தினகரனின் தவறான நடவடிக்கையால் தற்போதைய நிலை என்ன? யாராலும் தொட்டு பார்க்க முடியாத எஃகு கோட்டையான அதிமுக சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் அசைக்க முடியாது. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. மத்திய அரசு நிதி ரூ.1,500 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய அரசு நிதியில் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்வு உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்கள் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 கிராம விவசாயிகளுக்கு ரூ.174.6 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள 179 கிராம விவசாயிகளுக்கு ரூ.281.6 கோடி விரைவில் வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி., உள்பட பலர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.