“40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்”.தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள சங்கரப்பேரியில் நேற்று நடந்தது.இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,பா ஜ க தேசிய தலைவர் அமித்ஷா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது;-

 

ஒரு வாய்ப்பை கொடுத்தால் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம், அமித்ஷா ஒரு உதாரணம். கனிமொழியும் ஒரு உதாரணம். பிரதமர் என்ற வாய்ப்பை கொடுக்கும்போது பிரதமர் மோடி இந்த நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்ற பதவியை கொடுத்த பின்பும் 2ஜியினால் சுருட்டோ சுருட்டு என சுருட்டியவர் தான் தி.மு.க வேட்பாளர். எனக்கு தொண்டர்கள் இருக்கும் இடம் தெரியும். சாமானிய மக்கள் இருக்கும் இடம் தெரியும். தலைவர்கள் இருக்கும் முகவரி தெரியும். ஆனால் நிச்சயமாக திகார் ஜெயிலின் முகவரி தெரியாது. அது தான் எனது தகுதி.

இந்த தூத்துக்குடி வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற வேண்டும். தூத்துக்குடியில் ஏற்பட்டு உள்ள கறையை துடைத்து எறிந்து இந்த தூத்துக்குடி முன்னேற்றமான தூத்துக்குடியாக வர வேண்டும். தாமரை ஏரியில் மலரலாம். குளத்தில் மலரலாம். இங்கு தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். மலர்ந்தே தீரும். வெற்றி என்ற முத்தை நாம் பெற்றே தீருவோம். எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் சமர்பிப்பேன்” என்றார்

அவரைத் தொடர்ந்து பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்:- ஜெயலலிதா ஆன்மாவின் துணையுடன் அவரின் ஆட்சியை சீரோடும் சிறப்போடும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். தற்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை வலிமையான பாரதம் திறமையான பிரதமர் என்ற முழக்கத்தோடு நாம் சந்திக்க உள்ளோம். இன்னார் தான் பிரதமர் என்று சொல்லி தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். ஆனால் எதிர் அணியை சேர்ந்தவர்கள் யார் பிரதமர்? என்று சொல்வதற்கு கூட தெம்பு இல்லாமல் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.

பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர். அவர் தூத்துக்குடி மக்கள் ஏற்று கொள்ளும் வேட்பாளர். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நிலைபாட்டை எடுத்து இருப்பாரோ அந்த நிலைப்பாட்டை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் எடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றி கூட்டணியை நாம் அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றோம். தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நாம் உருவாக்கி காட்ட வேண்டும்” என்றார்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் :- இந்தியா 130 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாடுவளம் பெற, செழிக்க, திறமையான, உறுதியான, வலிமையான தலைமை வேண்டும். அந்த தலைமை பொறுப்புக்கு தகுதி வாய்ந்தவர் பிரதமர் நரேந்திரமோடி. நமது கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் விமர்சனம் செய்கிறார். இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இடைத்தேர்தல் வருவதற்கு சில துரோகிகள் செய்த சதிதான் காரணம். துரோகம் செய்த சதிகாரர்களையும், துரோகிகளையும் வீழ்த்த இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அனைவரும் முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கின்ற திட்டங்களை தடுத்து நிறுத்தும் ஒரு கட்சி இந்தியாவில் உண்டென்றால், அது தி.மு.க. மட்டும் தான். தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை வைத்து, தி.மு.க. வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து விளக்கத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்கு 243 ஏக்கர் நிலம் கொடுத்தது தி.மு.க. தான். அந்த காலகட்டத்தில் தொழில் துறை அமைச்சராக இருந்தவரும் ஸ்டாலின் தான்.

இதுபோன்ற அனைத்திற்கும் அனுமதி அளித்துவிட்டு அந்த ஆலை செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்துவிட்டு, அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம். சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக அப்போதைய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தபோதிலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று 28-9-2010-ல் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அப்போதே ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பொதுமக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் 1-10-2010 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்கிறது. 1-10-2010 அன்றே ஐகோர்ட்டின் மூடுதல் ஆணையை நிறுத்திவைத்து, ஆலையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

நிலைமை இவ்வாறு இருக்க தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி வந்தாலும். இங்குள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள். அ.தி.மு.க. அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை இப்பகுதி மக்கள் நன்கு தெரிந்திருப்பார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி தி.மு.க. வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதற்கு, தகுதியான வேட்பாளராக கருதி பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 பணிகள் ரூ.1075 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 18 பணிகள் ரூ.435 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளது. இதரப்பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.322 கோடி இழப்பீடாக பெறப்பட்டு 1,33,729 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மதுரை-தூத்துக்குடி சாலை நான்கு வழிச்சாலையாகவும், கிழக்கு கடற்கரைச் சாலை தூத்துக்குடி-திருச்செந்தூர் நான்கு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

கயத்தாறு கிராமத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டபொம்மன் மணி மண்டபம் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. தருவை குளத்தில் ரூ.16.25 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.25 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்க என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

தாமிரபரணி-கருமேனி- நம்பியாறு இணைப்புத் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 29-1-2018 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நிலையம் நிலை ஒன்றுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் தலா 660 மெகாவாட் திறனுடைய 2 அலகு கொண்ட இத்திட்டம், 2020-2021-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்

இறுதியாக பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா:-தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்பது மிகப்பெரிய கூட்டணி. கடந்த முறை மிகப்பெரிய அளவில் கூட்டணி இல்லாத போதும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த முறை 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும். தமிழகத்தை பா.ஜ.க., என்றுமே புறக்கணித்ததில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளோம். மீண்டும் பா.ஜ.க.,ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி அடையச் செய்வோம்.

தி.மு.க.,வும் காங்கிரஸும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் உள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறப் போவதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கூறுகிறது. காஷ்மீர் விசயத்தில் எந்த சமரசமும் இல்லை. காஷ்மீரை ஒருபோதும் பா.ஜ.க., விட்டுக்கொடுக்காது.

தீவிரவாத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா? தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல்வாதிகள். இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. எந்த குற்றச்சாட்டும் இல்லாதவரைதான் பா.ஜ.க., வேட்பாளராக தமிழிசையை நிறுத்தி உள்ளோம். அவரை வெற்றி பெற செய்யுங்கள்என்றார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜான்பாண்டியன்,  அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர், கடம்பூர் ராஜீ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், முன்ன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் ,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நவரச நாயகன் கார்த்திக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ண சாமி,வேட்பாளர் தமிழிசை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர்.கலந்துகொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..