கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தற்போது வரி சீரமைப்பு என்ற பெயரில் கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு பல மடங்கு வரி விதித்து பொதுமக்களையும்,வணிகர்களையும் வாட்டி வதைத்து வருகின்றது.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி பகுதியில் இருக்கும் சொத்துகளுக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக கூடுதல் வரி விதிப்பை விதித்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம்தேதி கீழக்கரை நகராட்சி சார்பாக ஒரு அறிவிப்பு சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு மட்டுமே இருக்கும் கீழக்கரை நகராட்சி பகுதியை *A B C* என்று மூன்று பிரிவுகளாக பிரித்து இருப்பதாகவும் தற்போது கீழக்கரை நகராட்சி நிர்வாகம் வரி சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் இது சம்பந்தமாக பொதுமக்கள் ஆட்சோபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சோபனை மனு கொடுக்கலாம் என்று அதே பத்திரிகையில் குறிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் நகரில் அக்கறையுள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினர் வரி சீரமைப்பு சம்பந்தமாக சுமார் 592 மனுக்களை நேரிலும்,தபால்மூலமாக அனுப்பினார்கள். ஆனால் ஆட்சபனை மனு செய்த ஒரு நபருக்கு கூட எந்த பதிலும் கூறாமல் தன்னிச்சையாக சுமார் 300 மற்றும் 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பு செய்ததோடு கீழக்கரை பொதுமக்களிடம் ஆட்டோ விளம்பரம் மற்றும் நாளிதழ்கள் மூலம் மிரட்டும் தோரனையில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி வருகிறது.
வரி சீரமைப்பு சம்பந்தமாக செய்தி தாள் விளம்பரப் படி பொதுமக்களை அழைத்து பேசாமல் ஏதோசதிகாரப்போக்கில் தன்னிச்சையாக வரி விதிப்பை அமுல் படுத்திய கீழக்கரை நகராட்சியின் ஏதோசதிகாரப்போக்கை கண்டித்து கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைமையில் அனைத்து சமுதாய, சமூக அமைப்புகள் நடத்தும் ஆலோசனை கூட்டம் இன்று (18/03/2019) மாலை 6.30 மணியளவில் ஹூசைனியா மஹாலில் நடைபெற உள்ளது.
You must be logged in to post a comment.