Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்புல்லாணி கோயிலில் புதைந்திருந்த பாண்டியர் கால கல்வெட்டுகள்..

திருப்புல்லாணி கோயிலில் புதைந்திருந்த பாண்டியர் கால கல்வெட்டுகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் புதைந்த நிலையில் இருந்த கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுகளை திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பட்டாபிஷேக ராமர் சன்னதியின் தெற்கு வெளிப்புறச் சுவர், மூன்றாம் பிரகாரம் ஆகிய இடங்களில் சுவரின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டுகள் இருந்ததை திருப்புல்லாணி சுரேஷ் – சுதா – அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர். இவை கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் ஆகும்.

இது குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவரும், தொன்மைப்பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளருமான வே.ராஜகுரு கூறியதாவது: இவை அனைத்தும் துண்டுக்கல்வெட்டுகள் ஆகும். இதில் ஒன்று கோனேரி மேல் கொண்டான் எனும் அரசாணைக் கல்வெட்டு. மூன்று கல்வெட்டுகளில் உலகமுழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. அவர் வீரபாண்டியன் சந்தி, சதயத் திருநாள், தேவதானம் ஆகியவற்றிற்காக நிலங்களை இக்கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.

திருப்புல்லாணி கோயிலில் வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூசைக்கட்டளையை உருவாக்கி அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை அவர் தானமாகக் கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி பகுதி ஆகும். சாயல்குடி அருகே உள்ள திருமால் உகந்தான் கோட்டை சிவன் கோயில் கல்வெட்டுகளில் அவ்வூர் பெயர் அமுத குணமங்கலம் எனவும், அளற்று நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கல்வெட்டில் அவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருட்களுக்காக, நீர் சூழ்ந்த நிலமும், கருஞ்செய்யும் நீக்கி மீதமுள்ள நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர்ப் பெயர் அதில் இல்லை.

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டில், இக்கோயில் பூஜைக்கு வேண்டிய நிமந்தங்களுக்கு வரி நீக்கப்பட்ட நிலத்தை இவர் தேவதானமாக வழங்கியுள்ளதை அறியமுடிகிறது.

இக்கல்வெட்டுகளில் சொல்லப்படும் உலகமுழுதுமுடையார் என்பவர் கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பட்டத்தரசி ஆவார். மன்னன் நலமாக வாழ அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதயநட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் அதை சதயத்திருநாளாக கொண்டாடவும் தேவையான தானங்களை இக்கோயிலுக்கு அவர் வழங்கியுள்ளார். எனவே இதில் உள்ள சில கல்வெட்டுகள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.

அந்தராயம், வினியோகம், தறி இறை, தட்டளிப்பாட்டம், செக்கிறை, அச்சு ஆகிய வரிகள் இக்கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. திருமலை ரகுநாத சேதுபதி காலத்தில் இக்கோயிலின் பல பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அச்சமயத்தில் கோயில் மறுகட்டுமானத்தின்போது பல கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணிதஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மைப்பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, ச.பிரவீணா, து.மனோஜ், ஜெ.தர்ஷினி ஆகியோர் கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!