இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுடன் நடைபெற்ற விழிப்புணர்வு குழு கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர குறுந்தகட்டினை அறிமுகப்படுத்தி கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில்,அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பிரசார கூட்டங்கள், விளம்பரங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலரின் முன்னனுமதி பெற்ற பின்னரே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களது விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
இது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள், உரிமையாளர்கள் அனைவரும், அரசியல் கட்சி வேட்பாளர்கள், அவர்களைச் சார்ந்த முகவர்கள் தேர்தல் தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட தங்களை அணுகும்போது தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஊடக விளம்பர சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூலம் தணிக்கை செய்யப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரின் முன்னனுமதி உள்ளதா என்பதை உறுதிசெய்த பின்னரே ஒளிபரப்ப வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம் மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு தலைப்புகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டுள்ளது. 100 சதவீதம் தவறாமல் வாக்களித்தல், சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாக்களித்தல், சேவைப் பணிகளில் உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்தல் போன்ற தலைப்புகளிலும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம், தேர்தல் விவரங்கள் குறித்து அணுகுவதற்கு தகவல் தொடர்பு எண்-1950 போன்றவை குறித்தும் ஜனநாயகம் தழைக்க அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எவரும் விடுபட்டு விடக்கூடாது என்ற வகையில் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இக்குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு தங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை தங்களது கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தமிழக அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் (ராமநாதபுரம்) சையது முகம்மது, மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்க செயலர் பரத் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.