இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: லோக் சபா பொதுத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களது சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள அரசு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரச் சின்னங்கள் ஆகியவற்றை அகற்ற அரசுத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு வெளியான 3 நாளில் இதுவரை அரசு பொது கட்டடங்களில் 2,760 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 493 சுவர் விளம்பரங்கள், 1,405 சுவரொட்டிகள், 437 விளம்பர பதாகைகள், இதர வகையில் 425 விளம்பரங்கள் அடங்கும். தனியார் கட்டடங்களில் 618 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 250 சுவர் விளம்பரங்கள், 269 சுவரொட்டிகள், 44 விளம்பர பதாகைகள், இதர வகையில் 55 விளம்பரங்கள் அடங்கும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் லோக் சபா பொதுத் தேர்தல்நன்னடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு பொது கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் ஆகியவற்றில் இதுவரை 3,378 விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.