தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முடிவைத்தானேந்தல் அருகே ராமர் என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் சேகரித்து பதப்படுத்தப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, உத்தரவின் பேரில் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஜெயலெட்சுமி, புதுக்கோட்டை உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 1½ டன் (1500 கிலோ) எடையுள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அங்கிருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த முகமது இதரிஷ் மகன் மன்சூர் அலி (30) என்பவரிடம் விசாரணை செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளர் நவீன் மற்றும் மரைன் போலீசார், முடிவைத்தானேந்தல் வருவாய் ஆய்வாளர் சுபத்ரா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாத்திமா ராணி ஆகியோரும் உடனிருந்தனர். விசாரணைக்குப் பின் புதுக்கோட்டை பொறுப்பு காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மன்சூர் அலியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
You must be logged in to post a comment.