வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவிற்கு மாறாக நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்..

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தமிழக அரசு தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பலகட்ட போராட்டங்களை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தியதன் பலனாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மாதம் ஒருமுறை RDO தலைமையிலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டம் நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

1.கூட்டம் நடைபெறும் இடம், நாள் போன்றவற்றை பத்து நாட்களுக்கு முன்னரே பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்க வேண்டும்.

2.கூட்டம் நடைபெறும் இடத்தில் கழிப்பறை, குடிநீர், வீல்சேர், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

3.கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பங்கேற்க வேண்டும்.

3.மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் அனைத்திற்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்.

4.பெறப்பட்ட மனுக்களின் மீது ஒரு வார காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகளின் மனு ஏற்பு அல்லது நிராகரிப்பு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

5.குறைதீர் கூட்டங்கள் அனைத்திலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் கட்டாயம் உரிய நேரத்தில் பங்கேற்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் நேரடியாக மனுக்களை பெற வேண்டும்.

6.ஒவ்வொரு மாத குறைதீர் கூட்டத்திற்கும் முன்னதாக கடந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, எந்தெந்த துறை சம்மந்தப்பட்டது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை வருவாய் நிர்வாக ஆணையர் விதித்திருந்த போதும் இதில் பலவற்றை பழனி கோட்டத்தில் கடைபிடிப்பதில்லை.

பழனி கோட்டத்தில் முறையாக கடந்த ஓராண்டில் 12 கூட்டங்கள் கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கூட்டங்கள் கூட்டப்படவில்லை, பழனியில் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை, ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வீல்சேர் வசதி, சாய்வுதளம் ஏற்படுத்தி தரவில்லை.

வேடசந்தூர் முகாமை பெயரளவிற்கு நடத்தியது, பழனி முகாம் உரிய நேரத்தில் துவங்காதது, மனு ஏற்பு அல்லது நிராகரிப்பு போன்ற விபரங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு தெரிவிக்காதது போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் வெறும் சடங்குக்காக வருவாய் நிர்வாக ஆணையர் சொல்லி விட்டார் என்கிற ஒரே காரணத்திற்க்காக பழனி கோட்டத்தில் இக்கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகிறது.

வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி முறையாக கூட்டங்களை நடத்தக்கோரும் சங்க நிர்வாகிகளை தனிநபர் விரோதிகளாக பாவிப்பது என்பதும் பழனி கோட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்படியாக வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவிற்கு மாறாக தொடர்ச்சியாக பழனி கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டம் புறக்கணிக்கும் போராட்டம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று காலை (08.03.19) நடைபெற்றது.

சங்கத்தின் பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பழனி நகர பொருளாளர் வெள்ளியங்கிரி, மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் பகத்சிங், உயரம் தடைபட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவிற்கு மாறாக பழனி கோட்டத்தில் கூட்டம் நடத்தப்படுவது பற்றி உரையாற்றிவிட்டு 200க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமை புறக்கணித்து வீட்டிற்கு சென்றனர்.

மாவட்ட ஆட்சியராகிய தாங்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தொடர்ச்சியாக பழனி கோட்டத்தில் நடைபெறும் மேற்கண்ட குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, தங்களது தலைமையில் முன்மாதிரியான கூட்டத்தை கூட்டி வழிகாட்டி ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..