இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் மீனவர்கள் அதிகளவில் இறால் மீன்களை பிடித்து வருகின்றனர். இறால் மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு மண்டபம் அருகே மரைக்காயர் பட்டடித்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தாய் இறால் மீன் மூலம் பல லட்சம் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு அந்த இறால் குஞ்சுகள் ஆராய்ச்சி நிலையத்தில் 45 நாட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதன் பின்னர் அந்த இறால் குஞ்சு மீன்கள் கடலில் விடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 15 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இந்த குஞ்சுகள் வளர்ந்து மீனவர்கள் பிடிக்கும் போது அதிகளவில் பணம் வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று கட்டங்களாக இறால் மீன்கள் கடலில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடற்கரையில் மூன்றாவது முறையாக 11 லட்சம் இறால் குஞ்சு மீன்கள் கடலில் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நாட்டுப்படகில் கடலுக்கு சென்று 11 லட்சம் இறால் குஞ்சு மீன்களை கடலில் விட்டார். இதில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி (பொறுப்பு) ஆர்.ஜெயக்குமார்,விஞ்ஞானிகள் சங்கர், பி.ஜான்சன் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.