தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் 06.03.19 இன்று நடைபெற்றது.
விவசாயிகளின் நியாயமான பிரச்சினைகள், கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து வருவதால் விவசாயிகளின் வாக்கு விவசாயிக்கே என்பதன் அடிப்படையை மையமாக கொண்டு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சாத்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் செல்வராஜ், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி சுந்தர்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நடராஜன்,சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெங்கட சுப்புராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சாமியா ஆகியோர் தமிழ்விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்பு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை புறக்கணித்து வருகின்றன. மேலும் தங்களின் நியாயமான கோரிக்கைகளை கூட போராட்டத்தின் மூலமே பெற வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையை மாற்றிட விவசாயிகளை ஒருங்கிணைத்து, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடத்திலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் மூன்று இடத்திலும் போட்டியிட உள்ளோம்.
தூத்துக்குடியில் உள்ள மீனவ சமுதாய மக்கள், வணிகர் சங்கத்தினர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் எங்களுக்கு ஆதரவு தர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.