இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பாக ‘சுகாதாரத் திருவிழா-சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.
தமிழக அரசு மக்கள் நலனுக்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணப்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 28.02.2019 முதல் 02.3.2019 வரை மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார திருவிழா-சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படி 28.02.2019 ல் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 01.3.2019 ல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச்சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதனையடுத்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (01.3.19) நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இம்முகாமில் பொது மருத்துவம், தாய், சேய் நலம், குடும்பநல ஆலோசனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, இருதய சிகிச்சை, தொழுநோய் கண்டறிதல், காசநோய் கண்டறிதல், கண் பார்வை பரிசோதனை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன், இசிஜி போன்ற நவீன மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் இயற்கை உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு அரங்குகள், குடும்ப நலம், வைரஸ் காய்ச்சல் தடுப்பு,எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.எஸ்.மீனாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.