2018-2019 ஆம் ஆண்டு அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான தடகளம், குழு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மார்ச் 1 காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4×100மீ தொடர் ஓட்டம் ஆண்களுக்கும் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4×100மீ தொடர் ஓட்டம் பெண்களுக்கும் நடைபெறவுள்ளன.
ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்கும் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, வாலிபால், ஆடவர் கால்பந்து போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டியில் கலந்து கொள்ளும் அரசுப் பணியாளர்களுக்கு அரசாணை எண்:93 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை 27.11.2013-ன்படி ஒருநாள் மட்டும் சிறப்பு தற்காலிக விடுப்பு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சான்றுகளை போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகள் முதல் இடத்தில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது சீருடைகள் வழங்கப்படும். தமிழக அரசு துறை சார்ந்த நிரந்தர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். சீருடைப் பணியாளர்கள் (காவல், ராணுவம், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்கள்) கலந்து கொள்ள அனுமதி இல்லை. இத்துறைகளைச் சார்ந்த அலுவலகப் பணியாளர்கள் (ministerial staff) கலந்து கொள்ளலாம். (Semi government autonomous bodies, state, public sector undertakings or similar offices) கலந்து கொள்ள அனுமதி இல்லை. அரசுத்துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள், அரசுப் பணிகளில் சேர்ந்த 6 மாதங்கள் நிறைவு செய்யாமல் இருப்பவர்கள்கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியார்கள் பங்கேற்கலாம். விளையாட்டுத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொள்ளலாம். அரசுத்துறைகளில் சில்லறைச் செலவினப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.