கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா..

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் 67வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இன்று67வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது.

10.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து கோயில் பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமானங்களுக்கும், தளவார கோபுர கலசத்துக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ ராஜூ, செயல் அலுவலர் அ.பாலசுப்பிரமணிய ராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் மு.பகவதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கட்டளைதாரர் கு.வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர், உதவி ஆணையர் தி.சு.ரோஜாலி சுமுதா, தலைமை எழுத்தர் அ.ராமலிங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..