தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தொட்டு தொடரும் ஒரு தமிழர் பண்பாடு. மனித வாழ்வில் நிகழும் அனைத்து வித பிரச்னைகளுக்கும் தை மாதம் பிறந்தால் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை விஞ்ஞானம், தொழிநுட்பம் வளர்ந்த காலத்திலும் ஐதீகம் தொடர்கிறது. விளைய வைத்த விவசாயிகள் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு விவசாயம் செழிக்க வழிபாடு செய்வதை போல, மீனவர்கள் பொங்கல் வைத்து கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி மீன்பிடியை துவங்குவதை மோர் பண்ணை கடற்கரை கிராம மீனவர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை கடற்கரை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தினர் ஒவ்வொரு ஆண்டும் தை பிறக்கும் நாளில் விடியும் நல்ல வேளையில் 7 சிறுமிகளை தேர்வு செய்து இங்குள்ள ரண பத்ரகாளியம்மன் கோயில் முன் செங்கல் அடுப்பு வைத்து பனை ஓலையால் தீ மூட்டி புது பானையில் பொங்கல் வைக்கின்றனர். இதனையடுத்து கோயில் வாசல் முன் பொங்கல் பானைகளை வரிசைப்படுத்தி கும்பம் வைத்து மாலையிட்டு சிறப்பு பூஜை செய்தனர். இதன் பிறகு மேள, தாளத்துடன் முழங்க, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலம் சென்று காவல் தெய்வம் முனியய்யாவை வழிபட்டனர். இதன் பிறகு வரிசைப்படுத்திய பொங்கல் பானைகள், கும்பங்கள் முன் மாதிரி படகு செய்து, அதில் பொங்கல் வைத்து நெய் திரியில் தீபம் ஏற்றினர். கிராமத் தலைவர் துரை பாலன் தலைமையில் சப்த கன்னிகள் கும்பம் சுமந்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் ஊர்வலமாக கடற்கரை சென்று கடல் அன்னைக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். மாதிரி படகை கடலில் செலுத்தி பெரிய படகில் சிறிது தூரம் சென்று முதல் மின்பிடி ஒத்திகை சென்று கரை திரும்பினர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.