கொடநாடு எஸ்டேட்டில் கொள்கையடிக்க 5 கோடி பணம் கொடுத்த தமிழகத்தின் வி ஐ பி :கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் திடுக் பேட்டி..

ஜெயலலிதா மரணத்திற்க்கு பின் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஆவணங்களை கொள்ளையடிக்க 5 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக கொள்ளையில் ஈடுபட்ட நபரான ஷயான் அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த திடுக்கிடும் ஆவணத்தை, தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் வெள்ளி அன்று வெளியிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில், காவலாளிகளை கட்டிப்போட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதில் காவலாளி பகதூர் பலியானார்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் டிரைவர், கனகராஜும் விபத்தில் கொல்லப்பட்டார்.

5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என்பதும், கனகராஜ் கொலையும் சந்தேகத்திற்கிடமானது என்றும், இந்த ஆவணப்படம் கூறுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் இந்த பேட்டியின்போது உடனிருந்தார். அவர் கூறியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், என்னை அணுகினார். கோடநாடு எஸ்டேட்டில், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் இருப்பதாகவும், முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலிருந்து இதற்காக ஆள் கூட்டி வரக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து கொள்ளையர்களை அழைத்து வருமாறும், கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.

இதையடுத்துதான், நான், கனகராஜ் உட்பட 10 பேர் கொடநாடு எஸ்டேட் உள்ளே நுழைந்தோம். அப்போது 2 காவலாளிகள் அங்கே இருந்தனர். அவர்களை கட்டிப்போட்டுவிட்டு, உள்ளேயிருந்த அறைக்கு சென்றோம். அங்கேயிருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு இரு வாகனங்களில் தப்பியோடினோம். அதில், காவலாளி பகதூர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருந்தனர். அவை கொடநாடு எஸ்டேட்டில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல ஆவணங்களைதான் கொள்ளையடித்து சென்றோம். அந்த ஆவணங்களை எடுக்க எங்களுக்கு 5 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. அதில், ஒரு ரூபாய்கூட எங்களுக்கு வரவில்லை. அதற்குள்ளாக கனகராஜ் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.

ஜெயலலிதா எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கட்சியினரை வைத்திருந்தாரோ அதேபோல கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்பிய ‘முக்கிய பிரமுகர்தான்’ இந்த ஆவணங்களை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆவணங்களை கனகராஜ் அந்த முக்கிய நபரிடம்தான் கொடுத்தார். இதன்பிறகுதான், கொள்ளையில் ஈடுபட்டவர்கள், கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5 பேர் சாவு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் ஷயான் தெரிவித்தார். மேலும் காவல்துறை என்னிடம் விசாரணை நடத்தியது என்றும், இப்போது சுதந்திரமாகதான் இருப்பதாகவும் ஷயான் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். கொடநாட்டில் இரு மாதங்கள் தங்கியிருந்து மேத்யூஸ் இந்த தகவல்களை திரட்டியதோடு, ஷயானின் வாக்குமூலத்தையும் பெற்று ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். கோடநாடு கொள்ளை, மற்றும் கொலைகள் தொடர்பான இந்த திடுக்கிடும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது. இதற்காகத்தான் நான் விடைதேடி ஆய்வுகளை மேற்கொண்டேன். கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடப்பட்ட, ஒபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரின் வீடியோ ஆதாரங்கள் இப்போது அந்த ‘முக்கிய பிரமுகரிடம்’ உள்ளன. எனவேதான் அவர்கள் அமைதியாக உள்ளனர். இவ்வாறு மேத்யூஸ் தெரிவித்தார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..