உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது..

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், மற்றும் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், ”மூன்று கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களில் மாடுபிடி வீரர்கள் மற்றும் போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு முன்பதிவு நாளை முதல் நடைபெறும்.

அதன்படி அவனியாபுரத்தில் 12 ,13 ஆகிய தேதிகளில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவும் ,13ம் தேதி போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவும் நடைபெறுகிறது. அதேபோல பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒரே நேரத்தில் வரும் 13ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுங போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு 12ஆம் தேதி முன்பதிவும்,போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு 14ம் தேதியும் நடைபெறும்” என்றார்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்வார்களா என்பது பின்னர்தான் தெரியவரும் என்றார். உலகமே எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வர இருக்கின்றனர்.

செய்தி:- கனகராஜ், மதுரை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..