இராமநாதபுரம் அருகே கழுகூரணியைச் சேர்ந்த தம்பதி சின்ன கருப்பன், லட்சுமி. இவர்கள் கொடைக்கானலில் ஆட்டு மந்தை பராமரித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் செல்வராஜ்,10. அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த நிலை கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இரண்டாவது மகன் முத்துமாரி, 9. அதே பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்குச் செல்லாமல் விளையாடி திரிந்த செல்வராஜ், கழுகூரணி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டீ ஸ்டாலுடன் இணைந்த ஓட்டலில் வேலைக்கு சென்று வந்தார். இது குறித்து இராமநாதபுரம் சைல்டு லைன் மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் கனகராஜ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கர், தொழிலாளர் ஆய்வாளர் மனோகர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் குருப் கயா ஆகியோர் அந்த ஓட்டலுக்கு இன்று மதியம் சென்றனர்.
அங்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த செல்வராஜை மீட்டனர். அரசு காப்பகத்திற்கு அழைத்தபோது வர மறுத்த செல்வராஜ் அழத் தொடங்கினார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரின் அறிவுரையை ஏற்ற செல்வராஜை, ஓட்டல் உரிமையாளர் சாகுல் ஹமீது தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காப்பகம் சென்றார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்..
You must be logged in to post a comment.