தலித் விடுதலை இயக்கம் சார்பில் புதுடெல்லியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏறட்டன. அதைதொடர்ந்து,தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இதனால்,போராடிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால்,சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
இந்நிலையில்தான்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றக்கோரி புதுடெல்லியில் தலித் விடுதலை இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம்,அந்த இயகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இது சம்மந்தமாக நம்மிடம் பேசிய தலித் பாண்டியன், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து,ஆலை இயக்குவதற்கான அனுமதியை மூன்றுவாரகாலத்திற்குள் வழங்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடைதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகார குளறுபடிகளுக்கு தமிழக அரசேதான் காரணமாக இருந்ததினால், இதுபோன்ற தீர்ப்புகள் வருகின்றன. தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரை சுட்டுக் கொன்று போராட்டத்தை ஒடுக்கியது தமிழக அரசு. அடித்து சித்ரவதைக்குள்ளாக்கியது. அமைதி வழி எதிர்ப்புகளுக்குகூட தடை விதித்தது. கிராமங்களில் காவல்துறையை கொண்டு குவித்தது.
புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம்…
இதுபோன்ற தமிழக அரசின் அடக்குமுறைகள் யாவும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக அமைந்ததால்தான்,இதுபோன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அதனால்,தமிழக அரசு இனிமேலாவது மக்களுக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். அதிகாரம் அரசின் கையில் இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு மக்கள் நலன் கருதி உடனடியாக கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு சட்டம் போன்று மக்களை பாதுகாக்க அவசரச் சிறப்புச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தைக் கண்டித்தும், நிரந்தரமாக ஆலையை மூடக்கோரியும்தான் ஆர்ப்பாட்டம் செய்தோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் என்று பலர் கலந்துகொண்டனர். தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டத்தை சட்டமன்றதில் இயற்றவில்லை என்றால்,எங்கள் போராட்டங்கள் வேறு வேறு வடிவங்களில் தொடரும்” என்றார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
You must be logged in to post a comment.