பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன 1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பொது மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு பணியை அனைத்து துறை அலுவலர்களும் முனைப்பு காட்ட வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். சிறப்பாக செயல்படும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஜன.26 குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்படுவர் எனவும் அறிவித்தார். இதன்படி, மண்டபம் ஒன்றியம்பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சியை பிளாஸ்டிக் மாசு இல்லா ஊராட்சியாக மாற்றும் பணியில் ஒன்றிய தனி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ராஜா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் களமிறங்கினர்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவுபடி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ.கேசவ தாசன் அறிவுறுத்தல் படி பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு பணியை முடுக்கி விட்டனர். பட்டணம் காத்தான் ஊராட்சியில் அனைத்து குடியிருப்புகளிலும் சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தீமை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்கள் குறித்து கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் (கி.ஊ) ராஜா கூறுகையில், தமிழக அரசாணை படி மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வழிகாட்டுதல் பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பட்டணம் காத்தான் ஊராட்சியை தமிழகத்தில் முதன்மை ஊராட்சியாக உருவாக்கும் முயற்சியை மக்கள் பேராதாரவுடன் துவங்கி உள்ளோம். பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்றார். ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் கலந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.