7
2019 ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வீட்டில் இருந்தே பாத்திரங்களைக் கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மக்களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை.
இந்நிலையில், இன்று முதல் தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில், பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களால் பார்சல் விலை உயரும் எனவும், இணையதளம் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்பவர்களும், பொதுமக்களும் விலை உயர்வை சந்திக்க நேரிடும் எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது: ஒரு முறை பயன்படுத்தும் கைப் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை தயாரித்து, தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய போதிய ஆட்கள் இல்லை. மேலும், ஒரு துணிப்பைக்கு ரூ.10 செலவாகிறது. இதுதவிர, சாப்பாடு, குழம்பு, பொரியல், கூட்டு போன்றவற்றை பார்சலாக விநியோகிக்க கன்டெய்னர்கள் (மீண்டும் பயன்படுத்த தகுந்த சிறிய பிளாஸ்டிக் பாக்ஸ்) தேவை. ஒரு கன்டெய்னர் ரூ.2.50-லிருந்து ரூ.5 வரை கிடைக்கிறது. ஒரு சாப்பாட்டை பார்சலாக அளிக்க குறைந்தபட்சம் 8 சிறிய கன்டெய்னர்களும், சாதத்தை அளிக்க ஒரு பெரிய கன்டெய்னரும் தேவைப்படுகின்றன.
இதற்காக ரூ.25 செலவாகும். மொத்தமாக ஒரு பார்சலுக்கு ரூ.35 கூடுதல் செலவாகும். இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வசூலிக்க வேண்டும்.
இந்தச் செலவை தவிர்க்க, துணிப்பையை வாடிக்கையாளரே எடுத்து வந்துவிட்டால் ரூ.10 குறைந்துவிடும். கூடவே, பாத்திரங்களையும் எடுத்துவந்தால், ரூ.25 குறைந்துவிடும். அதோடு, 5 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும். தடை அமலாகும் சில நாட்கள் சிரமமானதாக இருக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள்:- அஹமது , தூத்துக்குடி
You must be logged in to post a comment.