வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914 இல் தூக்கு பாலம் கட்டப்பட்டது. சரக்கு கப்பல் போக்குவரத்தின்போது பாலம் திறந்து மூடப்படுகிறது. இந்நிலையில் நவ.4 இல் தூக்கு பாலத்தை சரக்கு கப்பல் செல்வதற்காக திறந்து மீண்டும் மூடும் போது மைய பாலத்தில் ஏற்பட்ட விரிசலையடுத்து மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்ட நிலையில் சென்னை ரயில்கள் தவிர, தொலைதூர ரயில்கள் கன்னியாகுமரி திருப்பதி ரயில்கள் மதுரையில் இருந்தும், பாசஞ்சர் ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 2 வரை இயக்கப்படுகிறது. விரிசல் ஏற்பட்ட பகுதியில் பாலத்தை செப்பனிடும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்தகாரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பாலங்கள் கட்டுமான முதன்மை பொறியாளர் ரவீந்திர பாபு ( சென்னை), இந்திய ரயில்வே மேம்பாட்டு திட்ட இயக்குநர் ராஜிவ் வர்மா ( லக்னோ ) ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் கூறுகையில், “பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது மேற்கொண்டுள்ள பணி மிகவும் சிக்கலான பணி. தற்போது 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசிவருவதாலும் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் சூழலால் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே மிகவும் கவனமாகவும் அதே நேரத்தில் துரிதமாகவும் பணி நடைபெற்று வருகிறது. பணி நிறைவு குறித்தோ, ரயில் போக்குவரத்து மீண்டும் எப்போது தொடங்கலாம் என்பது குறித்தோ தற்போதைக்கு எதுவும் திட்டமிட முடியாது. சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்ப அதிகாரிகள் பாம்பன் ரயில் பாலத்தை பலப்படுத்தும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம் ..
You must be logged in to post a comment.