ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் 5வது நாளாக போராட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் இன்றும் 5 வது நாளாக கோஷம் எழுப்பி போராட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 5 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுவிதமான போராட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அரசு இதுவரை அழைத்துப் பேசாத காரணத்தால் இன்றும் 5 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இன்று மாலை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..