இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டரில் வெளி மாநில இளம் பெண்களை அழைத்து வந்து விபசாரம் நடத்தப்படுவதாக இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தல் படி கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை, இன்ஸ்பெக்டர் திருவானந்தம் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த விடுதி சென்றனர்.
கூடுதல் எஸ்பி., வெள்ளைத்துரை, இன்ஸ்பெக்டர் திருவானந்தம் ஆகியோர் தனி உடையில் விடுதியின் 4வது மாடி சென்று மசாஜ் சென்டர் சென்று கட்டணம் குறித்து விசாரித்தனர். நபருக்கு ரூ.1,500 என பேசி உள்ளே சென்றனர். அங்கிருந்த 2 இளம்பெண்களிடம் விசாரித்தனர். விசாரணையில் கேரள மாநிலம் ஆலப்புழா அனு 24, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ஸ்டெல்லா 22 ஆகியோரை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. இது குறித்து விடுதியின் வெளிபகுதியில் நின்ற போலீசாருக்கு கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தகவல் தெரிவித்து மசாஜ் சென்டரை சுற்றி வளைத்தார்.
அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற இருவர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த தினேஷ் 25, (புரோக்கர்), கேரளாவைச் சேர்ந்த விஷ்வா 40 ( மசாஜ் சென்டர் மேலாளர்) ஆகியோர் எனவும், கடந்த 2 ஆண்டுகளாக மசாஜ் சென்டரை நடத்தி வந்தது தெரிந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விபசார கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை மகளிர் போலீசில் மேல் நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டனர். பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான இந்த விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.