தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் விரைவில் அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் வழங்கினார். அவர் பேசுகையில், தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.
பரமக்குடியில் நடந்த விழாக்களில் அவர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18 பயின்ற, 2018-19 கலவியாண்டில் பிளஸ்-1 பயிலும் 24,151 மாணவர்களுக்கு ரூ.8.97 கோடி மதிப்பில் அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக பரமக்குடி வட்டத்தில் 18 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5,555 பேருக்கு ரூ.2.07 கோடி மதிப்பில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகோரும் பணி நடைபெற்றுள்ளது தமிழகம் முழுவதும் 15 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் , மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம், ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.