அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த பளு தூக்கும் போட்டியில், கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் கோப்பையை வென்று கோலோச்சி வந்த வட இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்களை பின்னுக்கு தள்ளி,வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்று சாதனை படைத்து, தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் கனவை நிறைவேற்றியுள்ளதாக துணை வேந்தர் க.முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான பளு தூக்கும் (ஆண்கள் பிரிவு) போட்டிகள் கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 220 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் பங்கேற்றனர்.அவர்களில் 109 கிலோ எடைப் பிரிவில் அப்துல்ஹக்கீம் கல்லூரி மாணவர்கள் பி.சரவணன் தங்க பதக்கமும், 81 கிலோ பிரிவில், ஆர்.விஜயரங்கன் தங்க பதக்கமும் வென்றனர்.அவர்களைத் தொடர்ந்து மற்ற 6 மாணவர்கள் முறையே 4 ,5,6 ஆம் இடங்களைப் பிடித்து மொத்தம் 201 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) வெ.பெருவழுதி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) சைத் சபி, துணைப் பதிவாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜா வரவேற்றார்.
விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் க.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பேசியதாவது…
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான பளு தூக்கும் போட்டியில்,கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் கோப்பையை வென்று கோலோச்சி வந்த வட இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்களை பின்னுக்கு தள்ளி,வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்று சாதனை படைத்து,தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் கனவை நிறைவேற்றி, தமிழகத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் டிசம்பர் 29,30 ஆகிய தேதிகளில் வேலூரில் முதன் முறையாக நடைபெற உள்ள மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளை நடத்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.
கே.எம்.வாரியார், செய்தியாளர் கீழை நியூஸ், வேலூர்
You must be logged in to post a comment.