Home செய்திகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கஜா புயல் நிவாரண பொருட்கள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கஜா புயல் நிவாரண பொருட்கள்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு துறை மூலம் ரூ.5.19 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று (23.11.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. கலந்துகொண்டு கூட்டுறவுத்துறை மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் பொது நிதி ரூ.5.19 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளித்திடும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிவாரண பொருட்கள் பெறப்பட்டு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு தேவையான அரிசி, பெட்சீட், பருப்பு வகைகள், பாய், மெழுகுவர்த்தி, போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 10 லாரிகளில் ரூ.52 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தின் மூலம் 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் வெட்டும் இயந்திரங்கள் பணியாளர்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சியின் மூலம் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத பகுதியில் பயன்படுத்திட ஜெனரேட்டர்களும் அனுப்பப்பட்டுள்ளது. இன்று கூட்டுறவு துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு போர்வை, லுங்கி, துண்டு, நாப்கின், நைட்டி ஆகிய பொருட்கள் 1000 பைகளிலும் மற்றும் இதர பொருட்களான பாய், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள், தீப்பெட்டி என ரூ.5.19 இலட்சம் மதிப்பிலான 9 வகையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் நிவாரண உதவிகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திரு. அருளரசு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்/இணை பதிவாளர் திருமதி இந்துமதி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தியாகராஜன், துணை பதிவாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!