கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: கஜா புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்த தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டல அளவிலான பாதுகாப்புகள் பல்வேறு துறை அலுவலர்கள் கொண்ட 135 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம். முன்னெச்சரிக்கையாக தங்க வைப்பதற்கு 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 148 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குக் செல்ல தடை விதித்து, படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்து பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.15) விடுமுறை அளிக்கப்படுகிறது. காற்றின் தன்மைக்கு ஏற்ப பாம்பன் சாலை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும். தனுஷ்கோடி கடல் பகுதிக்கு பொது மக்கள் நேற்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் தயாராக உள்ளனர்.
புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையிலும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இவ்வாறு அவர் என்றார். தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம் டிஐஜி காமினி, இந்திய கடலோரக் காவல் படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேசன், எஸ்பி ஓம் பிரகாஷ்மீனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன், தாசில்தார் பொன். கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.