பெருங்குளம் துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை 50 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு 2 வயர்மேன்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து பெருங்குளம், புதுமடம், பிரப்பன் வலசை, இருமேனி, உச்சிப்புளி மானாங்குடி, நாகாச்சி, தாமரைக்குளம், இரட்டைபூரணி செம்படையார்குளம் | வாணியன்குளம், ஆற்றாங்கரை, குயவன்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இந்த 13 ஊராட்சிகளும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த ஊராட்சி மின் இணைப்புகளில் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய தலா ஒருவர் என 13 வயர்மேன்கள் கவனித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் உச்சிப்புளி, புதுமடம் ஊராட்சி வயர்மேன்கள் மட்டுமே 13 ஊராட்சி மின் இணைப்பு களில் ஏற்படும் மின் இடையூறுகளை சரி செய்து வருகின்றனர்.

இது குறித்து 13 ஊராட்சி பொது மக்கள் சார்பில் பிரதிநிதிகள் கூறியதாவது: எங்கள் ஊராட்சிகளில் உள்ள மின் இணைப்புகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. தினமும் 13 முறை மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இரவில் ஏழெட்டு முறை ஏற்படும் மினவெட்டால் பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டு பாடங்கள் எழுத இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வேண்டும், கால்நடைகளை காவு வாங்கிய தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்த வேண்டும், பணியாளர் பற்றாக்குறையை போக்க போதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய உயரதிகாரிகள் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்று எவ்வித நடவடிக்கை இல்லை என்றனர். இது குறித்த புகார் மனுவை உதவி மின்பொறியாளர் கதிரவனிடம் முகமது அமீன், அப்துல்லா, களஞ்சியம், வடிவு சுப்ரமணியன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..