‘சீதக்காதி’ என்கிற பெயரில் திரைப்படம் வெளி வரக் கூடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி “சீதக்காதி படப் பெயரை மாற்றிடுக” என்கிற பல்வேறு தலைப்புகளில் ஏற்கனவே நமது கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் வீடியோ பதிவாக வெளியிட்டு இருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக நாம் தற்போது சட்ட ரீதியான முயற்சிகளை கையிலெடுத்து உள்ளோம். முதற்கட்டமாக கடந்த 30.10.2018 அன்று (CENTRAL BOARD OF FILM CERTIFICATION) மத்திய சென்சார் போர்டுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அடுத்ததாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். தற்போது இந்த மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த சீதக்காதி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேதி மாற்றத்தின் பின்னனியில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பெயர் மாற்றத்திற்கான சட்டரீதியான முயற்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சட்டப் போராளிகளுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என நம்பலாம்.
இது குறித்து மூத்த கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்கள் கூறுகையில், “சீதக்காதி என்கிற பெயரில் வேறு கதைக்களத்தில் சினிமா எடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பெயரில் திரைப்படம் வெளிவந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணியமுடன் போற்றும் வள்ளல் தமிழ் பெருமகனார் சீதக்காதிக்கு எந்த வகையிலும் புகழை சேர்ப்பதாக அமையாது. படக்குழுவினர் உடனடியாக இந்த சினிமா பெயரை மாற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று தீர்க்கமாக பேசினார்.
You must be logged in to post a comment.