Home செய்திகள் மகாத்மா காந்தி- 150ஆண்டுகள் – 150 கண்காட்சிகள்- 150 நாட்கள் – 150 இடங்கள்..சாதனை படைக்கும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்….

மகாத்மா காந்தி- 150ஆண்டுகள் – 150 கண்காட்சிகள்- 150 நாட்கள் – 150 இடங்கள்..சாதனை படைக்கும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்….

by ஆசிரியர்

மகாத்மா காந்தி 150 பிறந்த ஆண்டை முன்னிட்டு தமிழகத்தில் திருச்சியில் அஞ்சல்தலை மூலம் அறிவோம் காந்தியை தலைப்பில் மகாத்மா காந்தி 150 நாட்களில் 150 இடங்களில் 150 கண்காட்சியினை நடத்த முடிவு செய்து 100வது கண்காட்சியினை நெருங்கி உள்ளார்கள்.

மகாத்மா காந்தி தபால் தலை சேகரிப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் இருவரும் காந்தி கல்வி நிலையத்தில் அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை தலைப்பில் காந்தி வாழ்க்கை வரலாறு மற்றும் சிந்தனைகளை பயின்றவர்கள். மகள் கீர்த்தனா விஜயகுமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மூவரும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஆவர். இந்திய அஞ்சல் துறை நடத்திய மாவட்டம், மண்டலம், மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியில் பங்கேற்று பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளனர். மகாத்மா காந்திக்கு 150 வது ஆண்டு  ராட்டைக்கு நூற்றாண்டு இச்சிறப்புமிக்க ஆண்டில்  காந்திய சிந்தனைகளை லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி மற்றும் ராட்டை அஞ்சல் தலைகளை கொண்டு அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை எனும் தபால்தலை கண்காட்சியினை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, நூலகங்கள், அரசு அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்துகிறார்கள். 14 ஆகஸ்ட் 2018 ஆம் தேதி கண்காட்சி நடத்த தொடங்கியவர்கள் நாள் தோறும் பணியினை தொடர்கிறார்கள். குறிப்பாக காந்தியடிகள் மறைவிற்குப் பின்பு இந்தியா முழுவதும் 7 காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் தென்னிந்தியா முழுமைக்கும் மதுரையில் தான் அமைக்கப்பட்டது. ஏனென்றால் காந்தியடிகள் 22.09.1921 அன்று மதுரை மேல மாசி வீதியில் தங்கியிருந்த போது தான் அரைஆடைக்கு மாறினார்.

இவ்வருங்காட்சியகம் 1670ல் ராணி மங்கம்மாள் கோடை கால அரண்மனையில் அமைந்தது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய 14 அசல் பொருட்களும் 32 மாதிரிப் பொருட்களும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் காந்தி சுடப்பட்டு இறந்த அன்று காந்தியடிகள் அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த வேஷ்டியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி 150 ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மகாத்மா காந்தி தனிச் செயலருமான கல்யாணம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதே நாளில் திருச்சி காந்தி அஸ்தி மண்டபத்திலும் முதன் முறையாக மகாத்மா காந்தி தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கண்காட்சியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு அஞ்சல் உறைகள், அஞ்சல் அட்டைகள், அஞ்சல் முத்திரைகள் , புகைப்படங்கள், நூல்கள் உட்பட பல்வேறு சேகரிப்புகளை காட்சிப்படுத்தப் படுகின்றன. அதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், கியூபா, நேவிஸ், காம்பியா, கிரநாடா, சார்ஜா, மாசிடோனியா , பலாவு, ருமேனியா, தென் ஆப்ரிக்கா, சுரிநாம், வெனிசுலா, மாசிடோனியா ,7 காங்கோ, கானா, கினியா- பிஸ்சாசு, மடகஸ்கர், அயர்லாந்து, ஈரான், யுனைடட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா, ஜாம்பியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் வெளியிட்ட மகாத்மா காந்தி தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துக் கூறப்படுகிறது.

கண்காட்சியில் சுதந்திர இந்தியா அஞ்சல் தலைகளில் 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காந்தி தபால் தலைகள், (1869 – 1969) காந்தி நூற்றாண்டு தபால் தலைகள், காந்தி, நேரு, தண்டி யாத்திரை, 125 வருட காந்தி தபால் தலை, 50வது ஆண்டு நினைவார்த்த தபால் தலை, உப்பு சத்தியாகிரகம், 25, 30, 35, 50, 60 காசுகள் 1ரூபாய் பொது பயன்பாடு தபால் தலைகள்,  காட்சி படுத்தப்படுகிறது. காந்தி நூற்றாண்டிற்காக வெளியிட்ட புகைப்பட அஞ்சல் அட்டைகள், இன்லென்ட் கடிதம், விமான அஞ்சல் கடிதம் காட்சிப்படுத்தப் படுகிறது.

மேலும் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் அப்பள்ளி ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 ஆம் ஆண்டு காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 – 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி , அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அற வழியில்,அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930 – 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு மவுண்ட்பேட்டனை பிரபு வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. 1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார். உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது என 1869 – 1948 ஆண்டுகள் வரை மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் உலக நாடுகளில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப்பட்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறும், சிந்தனை கருத்துகளும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமாரால், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோரல் காந்திய சிந்தனைகளை எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!