துபாய் சிலிகான் ஒயாசிஸ் (Dubai Silicon Oasis) பகுதியில் உள்ள கெபாப் ஷாப் (Kebab Shop) எனும் உணவகத்தில் வித்தியாசமன விளம்பர பலகையை பார்க்கலாம், அதுதான் ” வேலையில்லாதவர்களுக்கு இலவச உணவு” என்பதுதான். ஆம் இங்கு வேலையில்லாமல் வருமானத்திற்கு சிரமப்படும் நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது, அதுவும் எந்த கேள்வியும் விபரங்களும் கேட்கப்படாமல்.
இதுபற்றி உணவகத்தின் உரிமையாளர் பாகிஸ்தானைச் சார்ந்த ரிஜ்வி கூறுகையில், இங்கு இலவசமாக உணவருந்த வரும் நபர்களிடம் எந்த கேள்வியும் கேட்பது கிடையாது. இதற்கு மாறாக என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களிடம், “வேலை கிடைத்த பின் உங்களால் இயன்றதை தாருங்கள்” என்ற மட்டுமே கூறுகிறோம். அதே போல் வேலை கிடைத்த பின் நிறைய போ் வலிய வந்து கணக்கில்லாமல் கொடுத்து விடடு சென்றுள்ளார்கள். அதே போல் இலவச உணவுக்கு யாரும் மாதக் கணக்கில் வந்தவர்கள் கிடையாது, சில நாட்கள் மட்டுமே வரக்கூடியவர்கள் உண்டு. இதில் ஒரு மனதிருப்தி ஏற்படுகிறது என்றார்.
இத்திட்டம் எப்படி செயல்படுத்த தூண்டியது என்ற கேள்விக்கு, “இங்கு வருடக்கணக்கில் உணவருந்த வந்து கொண்டிருந்த இருநபர்களில் ஒருவர் திடீரென வருவதை நிறத்தி விட்டார். பின்னர் விசாரித்ததில், அவர் வேலை இழந்த காரணத்தினால் வரவில்லை என்று அறிந்தேன். பின் அந்நபரை தொடர்பு கொண்டு எப்பொழுதும் போல் இங்கு உணவருந்தலாம், அதற்காக வேலை கிடைக்கும் வரை எந்த தொகையும் தர வேண்டாம் என கூறினேன். அந்த நேரத்தில் அவர் முகத்தில் ஏற்பட்ட சந்தோசமே நான் இத்திட்டத்தை தொடர்வதற்கு காரணமாக அமைந்தது” என திருப்தியுடன் கூறி முடித்தார்.
உதவி செய்வது பல வகை, ஆனால் சமயம் அறிந்து மக்களின் தேவை அறிந்து உதவி செய்வது சிறந்தது என்பது இது ஒரு முன்னுதாரணம்.
Source:- Khaleej Times – Dubai
You must be logged in to post a comment.