சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடல் எஸ்டிபிஐ கட்சியின் உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது!..

நாகை மாவட்டம் மயிலாடுதுறை செம்பனார் கோவிலை சேர்ந்த ராமலிங்கம்(வயது56) என்பவர் சவூதி அரேபியா அல்பாஹாவில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த 02.07.2018 அன்று மாரடைப்பால் இறந்து விட்டார்.

இறந்தவரின் உடலை சவூதியில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை எஸ்டிபிஐ கட்சியினரின் உதவியோடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

மாநில நிர்வாகத்தின் வழி காட்டலில் சவூதி அரேபியா அல்ஹஸ்ஸா கிளையின் இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னா அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சகோதரர் ஜின்னா அவர்கள் தம்மாம் இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் தலைவர் பைசல் மற்றும் அல்பாஹாவின் அருகில் உள்ள ஜித்தா மண்டல நிர்வாகிகளான ரபீக்,அப்பாஸ்,சாகுல் ஆகியோரின் உதவியோடும்,இந்திய தூதரகத்தின் உதவியோடும் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சவூதி அரேபியா அரசின் சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து இறந்தவரின் உடலை கடந்த 09-10-2018 அன்று பகல் 12 மணியளவில் கல்ப் ஏர் விமானத்தில் ஜித்தாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

10.10.2018 அன்று காலை 5.30 மணிக்கு இறந்தவரின் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது; பின்னர் இறந்தவரின் சொந்த ஊரான மயிலாடுதுறை செம்பனார் கோவில் வரை SDPIகட்சியின் நிர்வாகிகள் இறந்தவரின் உடலோடு ஒன்றாக சென்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தனர்.

மதம் பாராமல் மனிதம் பார்த்து செய்த இந்த பேருதவிக்காக இந்தியன் சோஷியல் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சிக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக இறந்த ராமலிங்கத்தின் உறவினர்கள் நெகிழ்ச்சியோடு கூறினர்.

உதவி கோரியதும் உடனடியாக களமிறங்கி பாதிக்கப்பட்டவர்களின் துயர் நீக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அல்ஹஸ்ஸா மற்றும் ஜித்தா நிர்வாகிகளை இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் தலைவர் பைசல் அவர்களும் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி அவர்களும் பாராட்டியுள்ளனர்.

செய்தி தொகுப்பு: கீழை அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..