இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வித்தானூர் கிராமத்தில் இன்று (15.09.2018) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் ‘தூய்மையே சேவை” திட்டப்பணிகளைத் துவக்கி வைத்து ONGC நிறுவனத்தின் சமூக வளர்ச்சி பொறுப்பு நிதியிலிருந்து முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 650 தனிநபர் இல்லக் கழிப்பறைகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அடையாளமாக சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது, “மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, சுற்றுப்புற தூய்மையினை மேம்படுத்திடும் நோக்கில் திறந்த வெளியில் மலம் பழக்கத்தினை முழுமையாக ஒழித்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவித்தொகையாக ரூ.12,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு 15.09.2018 முதல் 02.10.2018 வரையிலான நாட்களில் “தூய்மையே சேவை” என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ONGC நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பொறுப்பு நிதியிலிருந்து ரூ.4.72 கோடி மதிப்பில் சுலப் இன்டர்நேசனல் என்ற தனியார் சேவை நிறுவனம் மூலமாக 1,350 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக இராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 17 ஊராட்சிகளிலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்போடு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவற்றில் முதற்கட்டமாக 650 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைப்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, கட்டாயம் கழிப்பறைகளை பயன்படுத்திட வேண்டும். அதேபோல திடக்கழிவு திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கழிவுகளை மேலாண்மை செய்திட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ‘தூய்மையே சேவை” உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வித்தானூர் கிராம பொதுமக்களுடன் இணைந்து சுற்றுப்புற தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.த.ஹெட்சி லீமா அமாலினி, ONGC குரூப் ஜெனரல் மேனேஜர் திரு.பிரதீப்தா மிஸ்ரா ஜெனரல் மேனேஜர் (HR) திரு.என்.மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.ஆ.செல்லத்துரை சுலப் இன்டர்நேசனல் சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஸ்ரீவித்யா கணபதி மூலமாக உள்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.