தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மண்டபம் ஆகிய இடங்களில் இந்திய கடலோரக் காவல் படை நிலையங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையம் 13. ஜன 1986ல் உருவாக்கப்பட்டது. ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு உதவுதல், அந்நியர் ஊடுருவலை தடுத்தல், கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடத்தலை தடுக்க கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு உதவுதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. ரோந்து பணியில் அதி நவீன ஹோவர் கிராப்ட்கள், சிறிய ரோந்து கப்பல் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கடலோர கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த ரோந்து கப்பல் தேவை என இந்திய கடலோரக் காவல் படை உயரதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து சி 432 ரோந்து கப்பல் மண்டபம் நிலையத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது. கமாண்டிங் அதிகாரி எம். வெங்கடேசனிடம், கப்பல் துணை கமாண்டன்ட் வி.கே.சிங் முறைப்படி ஒப்படைத்தார். வெங்கடேசன் கூறியதாவது: மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையத்தில் 5 ஹோவர் கிராப்ட், 2 சிறிய ரக ரோந்து கப்பல் உள்ளது. ரோந்து பணியில் இன்று இணைந்துள்ள சி432 L&T நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
கடந்த 2017 ஜூலை 6ல் ரோந்து பணியில் தன்னை இணைத்து கொண்டது. மணிக்கு அதிகபட்சம் 45 நாட்டிகல் வேகம் செல்லக் கூடியது. பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஆதாம் பாலம் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் பலத்த ஈடுபடுத்தப்படும். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரேடார் உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ள இக்கப்பலில் துணை கமாண்டன்ட் உள்பட 13 வீரர்கள் பணியாற்றுவர். ஆபத்து காலங்களில் 1554 என்ற கட்டணமில்லா எண்ணில் தகவல் தெரிவித்தால் உரிய நேரத்தில் தேவையான உதவியை வீரர்கள் செய்வர் என்றார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.