இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று (10.09.2018) தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் (மதுரை அலகு) சார்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்இ கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையத்தினை திறந்து வைத்தார். நடமாடும் விற்பனை மையத்தினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பாக சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இதுவரை மொத்தம் 22 கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் பணியாளர்கள் குறைந்த விலையில் தரமான கடல்மீன் உணவு வகைகளை உண்டு பயன்பெறும் வகையில் புதிதாக கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் துவக்கப்பட்டுள்ளது.
இவ்விற்பனை நிலையமானது அலுவலக பணி நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் இடமான தனுஸ்கோடியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மேலும் இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன் ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு ஆகியவை தலா ரூ.70/-க்கும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியவை தலா ரூ.20/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையத்தில் குறைந்த விலையில் சுவையான உணவு வகைகளை உண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக மேலாளர் பி.செல்வராஜ், துணை மேலாளர் (மண்டபம்) எம்.மாசிலாமணி உட்பட உதவி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.