தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன் ஆக செல்கிறார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 10 வது தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3 வரை நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி திருச்சி ஆண்டவர் கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில் முதுகுளத்தூர் வீரர் தேவசித்தம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தேவசித்தம் உள்ளிட்ட 11 பேர் தமிழக அணி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அணி கேப்டனாக தேவசித்தம் தேர்வு செய்யப்பட்டார். அணி வீரர்கள் நேற்று (30.8.18) ஆந்திரா புறப்பட்டுச் சென்றது. தேவசித்தம் தலைமையிலான தமிழக அணி ஏற்கெனவே 4 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இம்முறையும் சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கு பெருமை பெற்றுத் தருவதாக அணி வீரர்கள் உறுதி ஏற்று நெல்லூர் சென்றுள்ளனர். லங்காடி விளையாட்டை அரசு அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என தேவ சித்தம் உள்ளிட்ட தமிழக அணி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.