இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சுயதொழில் துவங்க ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கிட இலக்கு..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடல் உவர் ஆராய்ச்சி மையத்தில் இன்று (10.08.2018) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு சுயதொழில் துவங்கிட கடனுதவி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை எய்துவது தொடர்பாக வங்கியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த சமுதாய வள அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது. ​இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது,”​தமிழ்நாடு அரசு மகளிர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயமாக தொழில் செய்து சமுதாயத்தில் நம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, நடப்பு நிதியாண்டில் இணைப்பு கடனுதவி (FINANCIAL LINKAGE) திட்டங்களின் வாயிலாக இராமநாதபரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ​ ​இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 6,892 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 86,000 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தகைய மகளிர் சுயஉதவிக் குழுவினர் சிறிய அளவில் மீன்பிடி சார்ந்த தொழில் காய்கறி தோட்டம் அமைத்தல் தையல்கடை அமைத்தல், பனையோலை சார்ந்த வீட்டு உபயோகப்பொருள் தயாரித்தல் போன்ற பல்வேறு சிறுதொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். அதன்படி இத்தகைய மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள கடனுதவி திட்டத்தினை முழுமையாக பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பது அலுவலர்களின் கடமையாகும். எனவே மகளிர் திட்டம் அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் இத்தகைய கடனுதவி திட்டங்கள் குறித்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அதேவேளையில் வங்கியாளர்கள் தகுதியான பயனாளிகளுக்கு, தமிழ்நாடு அரசு வழங்கும் இக்கடனுதவி திட்டமானது சிரமமின்றி நூறு சதவீதம் முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசினார்.

​இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட திட்டஅலுவலர் கோ.குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.சங்கரன், மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பிரான்சிஸ், இராமநாதபுரம் பாண்டியன் கிராமவங்கி மேலாளர் குசலவன் உள்பட அரசு அலுவலர்கள், வங்கிகளைச் சார்ந்த பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு சமுதாய வளஅமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..