இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கல்வி கற்கும் ‘ஸ்மார்ட்’ வகுப்பை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இன்று (10/7/2018) ஆய்வு செய்தார்.
தேசிய அளவில் வளரும் மாவட்டமாக மத்திய அரசு தேர்வு செய்த ராமநாதபுரத்தில் கல்வி வளர்ச்சி, விவசாயம், நீர்ப்பாசனம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பபாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்கும் விதமாக தமிழக அரசின் பாடத்திட்டங்களை கணினி, புரொஜக்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு எளிய முறையில் படக்காட்சிகள் மூலம் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் போதிய அடிப்படை கல்வியறிவு ஆகியவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகளை கண்காணிக்க ஆசிரியர் பயிற்றுநர்களை நியமித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆலோசனை பேரில் ஆசிரியர் பயிற்றுநர் உலகநாதன் 18 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு நடத்தி வருகிறார். ஸ்மார்ட் வகுப்பு மூலம் எழுதி பழகுதல், வாசித்தல் பயிற்சிகளில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திறன் பலகை கற்பித்தல் மூலம் நடத்தப்படும் ‘ஸ்மார்ட்’ வகுப்பை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இன்று( 10/7/2018) ஆய்வு செய்தார். கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உறுதியளித்தார். முதன்மை கல்வி அலுவலர் முருகன் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.