விசிட் விசாவில் வேலை கிடைத்தால் இனி இந்திய தூதரகத்திலேயே நன்னடத்தை நற்சான்றிதழ் பெறலாம்…

அமீரகத்திற்கு புதிதாக வேலைவாய்ப்பு விசாக்களில் வருவோர் கட்டாயம் நன்னடத்தை நற்சான்றிதழை (Good Conduct Certificate) இணைக்க வேண்டும் என்ற சட்டம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நமது நாட்டிலிருந்து வருகிறவர்கள் சந்திக்கும் அலைச்சல்கள், பொருளாதார விரயம், கால விரயம் போன்றவை ஏராளம்.

அமீரகத்திற்கு ஏற்கனவே வருகை தந்து கஷ்டப்பட்டு வேலைதேடினாலும் அதை தக்கவைத்துக் கொள்ள இந்த நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்காக மீண்டும் இந்தியா திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது நமது சார்பில் ஒருவர் அத்தகைய சான்றிதழை அலைந்து பெற்று அனுப்ப வேண்டும் என்ற நிலை தடையாக வந்து நின்றதையடுத்து, இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களிலேயே நன்னடத்தை நற்சான்றிதழுக்கு இணையான Police Clearance Certificate – PCC எனப்படும் போலீஸாரின் தடையில்லா சான்றிதழை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கவுன்செலர் ஜெனரல் விபுல் அவர்கள் தெரிவித்தார்.

அமீரகத்திற்கு விசிட் விசாக்களில் வந்து வேலைவாய்ப்பை பெற்றவர்கள் அதற்கான பணி நியமன கடிதத்தை (Offer Letter) சேம்பர் ஆஃப் காமர்ஸில் அட்டஸ்டேசன் (To be attested in Chamber of Commerce) செய்வதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் டிரேட் லைசென்ஸ் காப்பியையும் (Trade License Copy) இணைத்து இந்திய தூதரகப் பணிகளை மேற்கொள்ளும் BLS International என்ற அவுட்சோர்சிங் ஏஜெண்ட்டுகள் வழியாக விண்ணப்பம் செய்தால் இந்தியாவில் செயல்படும் மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஆவணங்களில் (Data) காணப்படும் போலீஸாரின் தடையில்லா சான்றிதழை (PCC) ஆதாரமாக வைத்து இங்கு நற்சான்றிதழை வழங்குவார்கள்.

ஒருவேளை போலீஸ் விசாரணையின்றி முன்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால் மட்டும் சம்பந்தப்பட்ட உள்ளுர் காவல் நிலையங்களுக்கு அனுப்பி அவர்கள் தரும் விபரங்களின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் போலீஸ் ஆவணங்களில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களும் மேல் நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரியப்படுத்தப்படும் என்பதுடன் நற்சான்றிதழும் வழங்கப்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்தி உதவி:- அதிரை நியூஸ், கீழக்கரை கிளாசிஃபைட், JNJ team.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..