கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25.02.2018 அன்று காலை 11.00 மணியளவில் 15-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா அவர்கள் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். மேலும் அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை, பண்பாடு, சமூகநெறி மற்றும் பாரம்பரியத்தினை காக்க உறுதி மேற்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் படித்த மாணவர்கள் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் தங்களது அறிவாற்றலை புதிய கண்டுபிடிப்புகளில் உட்படுத்தி தொழிற்துறையிலும் பொருளாதாரத்திலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் மேலும் நமது தாய் மொழியாம் தமிழ, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் ஆகியவை மென்மேலும் சிறப்படைய பட்டம் பெற்ற மாணவ மாணவியர் அயராது பாடுபடவேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஹாமீது இப்ராகிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முகம்மது ஜஹுபர், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், முகம்மது சதக் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர் ஹபீப் முகம்மது, இராமநாதபுரம் சைடெக் கல்வி மைய இயக்குநர் ரியாஸ்அகமது மற்றும் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின்மொழிந்தனர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும் பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 271 இளங்கலை மாணவ, மாணவியருக்கும் 72 முதுகலை மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு முகம்மது சதக் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷர்மிளா வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.