கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெறப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகையும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகையும் ஒன்றாக இருந்தது.
இது குறித்து நாம் கீழை நியூஸ் வலைத்தளத்தில், தெளிவான ஆதாரங்களுடன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த தகவல்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வேளையில் இன்று மதுரையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையத்தின் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனால் இங்கு ஆட்சேபனை கருத்துக்ளை தெரிவிக்க வரும் மனுதாரர்கள் குளறுபடியான மக்கள் தொகை குறித்து நம்மிடம் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்தில் நகராட்சி அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதிரடியாக திருத்தம் செய்துள்ளனர்.
நேற்று வரை 2011 ஆம் ஆண்டில் கீழக்கரை நகராட்சின் மொத்த மக்கள் தொகை 47730
இன்றைய தேதியில் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக திருத்தியுள்ள கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகை 38355
இது குறித்து சமூக ஆர்வலர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் கூறுகையில் ”கீழக்கரை நகராட்சியில் இந்த வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் அனைவரும், அறிந்து கொள்ளும் வகையில் முறையான பொது அறிவிப்பு செய்யவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வார்டு மறுவரையறை பட்டியலின் நகல் வழங்கப்படவில்லை. கீழக்கரை நகராட்சி பகுதியில் வாழும் நம் மக்கள் எவருக்கும் தாங்கள் எந்தெந்த வார்டுக்கு மாற்றி இருக்கின்றனர் என்பது கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்.
இந்நிலையில் நகராட்சி ஆவணங்களின் படி நகராட்சியின் மொத்த மக்கள் மக்கள் தொகையான 47730 எண்ணிக்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ள கீழக்கரை நகராட்சி அதிகாரிகள், நேற்று வரை, கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த 47730 என்கிற மக்கள் தொகை எண்ணிக்கையை சட்டத்திற்கு புறம்பாக 38355 என்று திருத்தம் செய்துள்ளனர். இதனை சட்டப் போராளிகள் குழுமம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்த அனைத்து ஆவணங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து நீதியை நிலை நாட்டுவோம்.” என்று தெரிவித்தார்.
கீழைநியூஸ் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட செய்தி..
http://keelainews.com/2018/01/05/ward-issue/
You must be logged in to post a comment.