கீழக்கரையில் உள்ள பழமையான அரசு வங்கிகளில் பாரத வங்கியும் ஒன்று. அதே போல் பாரத வங்கியில் உள்ள நிறைவான சேவைகளுக்கு சமமாக குறைகளும் எப்பொழுதும் உண்டு. சமீப காலமாக தனியார் வங்கிகளின் வரவு பாரத வங்கிக்கு கீழக்கரையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் மிகையாது. அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் குறையை கேட்டு நிவர்த்தி செய்யும் வண்ணம் கடந்த நவம்பர் 22ம் தேதி ஹுசைனியா மஹாலில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பாரத வங்கி மண்டல மேலாளர் சேகர் தலைமை தாங்கினார். கீழக்கரை கிளை மேலாளர் மாணிக்கம் பிற அதிகாரிகரிகளையும், பொதுமக்களையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் மண்டல மேலாளர் பாரத வங்கியுடன் இணையப்போகும் வங்ககளின் விபரங்கள், 2017 ஏப்ரல் வைப்பு தொகை கணக்கின் வீழ்ச்சி காரணங்கள், விவசாயிகளுக்கான தங்க நகை கடன் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் சேவை செய்யும் அவசியம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியே முதல் நோக்கம் என்பதினை பற்றியும் விளக்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் அரசாங்க மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் வங்கியின் சேவை திருப்தி அளிப்பதாக கூறினார். அதே சமயம் சித்திக் என்பவர் பாரத வங்கி ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படவில்லை, சாமானிய மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்துகிறது என்பதை அதிகாரிகள் மத்தியில் எடுத்துரைத்தார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்ததோடு. சமீப காலங்களில் நடைமுறைபடுத்திய சில திட்டங்களின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். அதே போல் அப்பாஸ் அலி என்பரும் கிளை மேலாளரின் செயல்பாட்டில் திருப்தியை வெளிப்படுத்தியதோடு, சில சமயங்களில் கிளை மேலாளரை சந்திக்க இயலாமல் போகும் சூழ்நிலையையும் விவரித்தார். அதுபோல் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிறைகுறைகளை பதிவு செய்தனர்.
இறுதியாக மண்டல மேலாளர் வங்கி கிளை மாற்றத்தின் நிலையை விவரித்தார், அதைத் தொடர்ந்து வங்கி அதிகாரி ஶ்ரீதர் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
You must be logged in to post a comment.