ஆடித் தள்ளுபடியை நாமும் ஆனந்தமாக மாற்றிக் கொள்ளலாமே??

ஆடி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் ஆடி மாத விளம்பரங்களைத் தொடங்கி விட்டன. 5 சதவீதம் தொடங்கி 50 சதவீதம் வரை தள்ளுபடி விளம்பரங்களை நாம் பல விதமாக ரேடியோ, தொலைக்காட்சி, சமூக வலைதளம், சுவரொட்டி, பிரசுரங்கள் என்று பல முனைகளில் இருந்து பொதுமக்களை திண்டாட வைக்கின்றனர்.

ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றாலே ராசி இல்லாத மாதம், வியாபாரமே இருக்காது என்ற நிலையை மாற்றி இன்று அதிகமாக வியாபாரம் நடக்கும் மாதமாக மாற்றியுள்ளது இன்றைய நவீன விளம்பர உத்திகள். உதாரணமாகும் இராமநாதபுரத்திலேயே பிரமாண்டமான மஹாராஜா, ஆனந்தம் தொடங்கி சாதாரண கடைகள் வரை ஆடி விளம்பரத்தை தொடங்கி விட்டன.

ஆனால் பல பேர் மனதில் எழும் எண்ணம் வியாபாரிகள் நஷ்டத்திலா வியாபாரம் செய்வார்கள்?? என்பதுதான், நிச்சயமாக இல்லை, ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் சில சதவீதத்தை குறைத்து, வியாபாரம் இல்லாத மாதத்தை லாபகரமாக மாற்றி விடுகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பல மாதங்களில் நடக்க வேண்டிய வியாபாரத்தை ஓரே மாதத்தில் நடத்தி லாபம் சம்பாதித்து விடுகிறார்கள் என்பதுதான் மறைமுகமான உண்மையும் கூட.

ஆனால் இந்த தள்ளுபடியை நாம் எப்படி ஆனந்தமாக்கி கொள்வது??. வியாபாரிகள் எவ்வாறு புத்திசாலித்தனமாக நாளைக்கான வியாபார உத்தியை இன்றே திட்டமிடுகிறார்களோ, அதேபோல் நாமும் நமக்கு சமீபத்திய மாதத்தில் வரக்கூடிய தேவைகளை நாம் இன்றே திட்டமிட்டால் நாமும் லாபம் அடையலாம். உதாரணமாக இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான ஹஜ் பெருநாளைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் நாம் இந்த ஆடி மாதத்திலேயே திட்டமிட்டால் நிச்சயமாக கணிசமான தொகையை சேமிக்க முடியும், அதுபோல் மற்ற சகோதர்கள் வைபவ காரியங்களுக்கு சாதகமாக கருதும் ஆவணி மாதமும் வர இருக்கிறது, ஆகையினால் நாமும் வியாபாரிகள் போன்று திட்டமிட்டு சிந்திப்போம், ஆடி மாதத்தை நாமும் ஆனந்தமாக்கி கொள்வோம்.

ஆனால் ஜவுளி வியாபரத்தில் மட்டுமே ஆடி தள்ளுபடி வியாபாரம் இருந்த நிலையில் இன்று குடிகாரர்களுக்கும் ஆடி தள்ளுபடி விலையில் போதை தரும் பொருட்களை விற்பது மிகவும் வேதனையான விசயம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..