திறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழக அரசாங்கம் மூடப்பட்ட கடைகளை மற்ற பிற இடங்களில் திறப்பதற்கான முயற்சியிலேயே இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகளை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தார்கள். இதையடுத்து கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் நாம்தமிழர் கட்சியினர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி தற்பொழுது போராட்டம் நடத்த வேண்டாம், அதிகாரிகளை விரைவில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து 30-05-2017 அன்று கீழக்கரை தாலுகா அலவலகத்தில் டி.எஸ்.பி, தாசில்தார் இளங்கோவன், மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து, கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி மற்றும் நாம்தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராஜு, நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோகுல நகர் மகளிர் மன்ற பெண்கள் ஆவேசமாக அப்பகுதியில் இருக்கும் மதுக்கடையில் ஆண்கள் குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் படும் அவஸ்தையை ஆவேசமாக எடுத்துரைத்தார்கள். அதற்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் அமிர்தலிங்கம் கடையை உடனடியாக அடைப்பது சாத்தியமில்லை,அரசு அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க குறந்தது ஆறு மாதம் ஆகும் என்றார், ஆனால் அதற்கு மகளிர் அணியிடம் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..