கீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா?? இல்லை அலைகழிக்கும் எதிரியா??…

கீழக்கரையில் உள்ள பாரம்பரிய மிக்க வங்களில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கியாகும். இன்று எத்தனையோ சிறப்பான தனியார் வங்கிகள் சேவைக்கு வந்தாலும், இன்றும் பாரத வங்கிதான் அரசாங்கத்தால் இயக்கப்படும் முறையான வங்கி என்ற எண்ணத்திலேயே ஏராளமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். ஆனால் அந்த எண்ணத்தையே பாரத வங்கியினர் அவர்களுக்கு சாதகமாக்கி கொண்டு பொதுமக்களை வங்கி சேவையில் எவ்வளவு அலைக்கழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அலைக்கழிக்கிறார்கள்.

வங்கியில் உள்ள சேவைகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்கும் மக்களின் நலனுக்காகவுமே உருவாக்கப்பட்டது. அதே போல் மக்களுக்கு எது அவசியமோ அதை எளிதாக்கி கொடுப்பது வங்கியின் கடமையாகும். ஆனால் சமீப காலமாக கீழக்கரை பாரத வங்கியில் அவர்களுக்கு எதில் லாபம் பயக்குமோ அந்த சேவைகளை மட்டுமே பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்றால் மிகையாகாது. உதாரணமாக தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுப்பதின் மூலம் வங்கிக்கு வருமானம் கிடைக்கும், ஆகையால் வங்கியில் இருக்கும் ஊழியர்கள் வேலைப் பளுவையும் குறைத்து பாமர மக்களையும் தானியங்கி இயந்திரம் மூலம் பணத்தை எடுக்க கட்டாயப்படுத்துதல், அதற்கு உட்பட்டு செல்லும் பாமர மக்களை வங்கி ஊழியர் முதல் காவலாளி வரை அவர்களிடம் செலுத்தும் அதிகாரம் அதைவிட மிகவும் வேதனைக்குரிய செயல்.

அடுத்ததாக சமீப காலமாக பணம் செலுத்துவதையும் தானியங்கி மூலம் செலுத்துவதையே வங்கி நிர்வாகம் வலியுறுத்துகிறது. ஆனால் அதைக் கட்டாயப்படுத்தும் முறையோ மிகவும் கண்டிக்கதக்கது. பணம் செலுத்துவதற்கான சீட்டுகளை முன்னர் அனைவரும் எளிதாக எடுக்கம் விதமாக நுழைவு வாயிலிலேயே வைப்பது வழக்கம், ஆனால் சமீப காலமாக வங்கியின் மேலாளர் பாதுகாத்து வைக்கும் பொக்கிஷமாக மாறிவிட்டது. கவுன்டரில் பணம் செலுத்த விரும்பும் நபர்கள் குற்றவாளி போல் வங்கியின் மேலாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிய பிறகே பொக்கிஷமான அந்த பணம் செலுத்தும் சீட்டு கொடுக்கப்படுகிறது. இவ்வளவு விசாரனைக்கு பிறகும் கிடைப்பது கையொப்பம் போட்ட ஒரு சீட்டு மட்டும்தான். சிறு வியாபாரம் செய்யும் நபர்கள் ஒவ்வொரு முறையும் வங்கி மேலாளரை கண்ட பின்புதான் அந்த ஒரு சீட்டும் வழங்கப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய வங்கிகள் தங்கள் வசதிக்கேற்ப மக்களை அலைக்கழிப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயல். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல் தானியங்கி இயந்திரம் மூலம் பெரிய மதிப்பு தொகையான 100, 500, 2000 போன்ற நோட்டுகள் மட்டுமே செலுத்த முடியும் சிறிய மதிப்பு உள்ள 10, 20, 50 போன்ற நோட்டுகள் செலுத்த முடியாது. இந்த கெடுபிடியால் மிகவும் பாதிக்ப்படுபவர்கள் சிறு சேமிப்பு செய்பவர்களும், சிறு தொழில் புரியும் வியாபாரிகள்தான். இந்த பிரச்சினை கூட தெரியாமல வங்கியின் மேலாளர் அறைக்குள் அமர்ந்துள்ளார்.

இது சம்பந்தமாக வங்கியின் மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் கூறிய பதில் எங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகம் அதிகமாக இயந்திரங்களில் பண பரிவர்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளோம், ஆகையால் பணம் செலுத்தும் சீட்டுகள் கொடுப்பதை நாங்கள் குறைக்கிறோம் என்றார். மக்களுக்கு எற்படும் சிரமங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல். இனி பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும்….

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.